தத்துவங்களை ஆராயுமிடத்து, எல்லா உயிர் களும் முடிவில் அடையும் இடமாய் உள்ள பரமசிவனும், பரா சத்தியும் முதற்கண் முறையே பர நாத மூர்த்தியும் பரவிந்து சத்தியுமாய் நிற்க பின்பு பரவிந்து சத்தியினின்று அபர நாத மூர்த்தியும், அவனிடத் தினின்று அபரவிந்து சத்தியும் தோன்ற, அதன்பின் அபரவிந்து சத்தியினின்று சதாசிவன், மகேசுரன், உரூத்திரன், மால், அயன், என்போர் முறையே ஒருவரினின்று மற்றொருவர் தோன்றுவர்.
`இங்ஙனம் பரமசிவனும், பராசத்தியும் ஆகிய அவர்களே தடத்த நிலையில் பர நாத மூர்த்தி, பர விந்துசத்தி முதலாகிய ஒன்பது பேதங்களாய் நிற்பர்` என்றபடி இதனை,
``சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்தி ரன்றான், மால், அயன் - ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; அருவம் நால்; இங்கு உருவம் நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்``3
என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. இச் செய்யுளில் பரநாத மூர்த்தியே `சிவம்` என்றும், பர விந்து சத்தியே `சத்தி` என்றும் சொல்லப் பட்டனர். எனவே, `நாதம், விந்து` எனப் பட்டவை அபர நாதமு, அபர விந்துவும் ஆயின. இம் மந்திரத்துள் `பரநாதம்` என்றதனானே அபர நாதமும், `பரவிந்து` என்றதனானே அபர விந்துவும் பெறவைக்கப் பட்டன. `காணில்` என்பதை முதலில் வைத்து, `ஓங்கி` என்பதை `ஓங்க` எனத்திரித்து, `ஈசன் அவன்பால் ஆய், அரி, பிரமன், அமர் ஆபதித் தேவாம் உருத்திரன் ஆம்` என இயைத்து முடிக்க. செய்யுள் பற்றி இங்ஙனம் முறை பிறழவும், சொற் சுருங்கவும் ஓதினார். ஈசன் - மகேசுரன். `ஆய்` என்பதனையும் `ஆக` எனத் திரிக்க. `மகேசுரன், சதா சிவன்பால் ஆவன்` என்றகுறிப்பானே, `உருத்திரன் மகேசுரன்பால் ஆம்` என்பது பெறப்பட்டது `அரி, பிரமன்` என்பது செவ்வெண். அதன்பின் தொக்கு நின்ற `இவ்விருவரும்` என்னும் எழுவாய் `ஆபதி` என்பதில் ஆதலாகிய பயனிலையோடு முடிந்தன. `அமர்` என்னும் முதனிலையே `அமர்ந்து` என எச்சப்பொருள். அமர்ந்து ஆதலாவது. ஒடுங்கியிருந்து தோன்றுதல். `ஆ பதி` ஏதுப் பொருட்டாய வினைத்தொகை. பதி - தலைவன். பதித் தேவாம் உருத்திரன்` என்பது, `பதியாகிய தேவனாகிய உருத்திரன்` எனப் பல்பெயர் ஒட்டுப் பண்புத் தொகை. இந்திரனுக்கு இங்கு இடம் இன்மையால் `அமராபதி` என்பதை இந்திரனது நகரமாகக் கொள்ளுதற்கு யாதும் இயைபில்லை. `அமர்ந்தாபதி` என்றே பாடம் ஓதுல் சிறக்கும்.
சிவனது இந்த ஒன்பது நிலைகளும் தடத்த நிலைகளேயாகும். இவை `நவந்தரு பேதம்` - எனப்படுகின்றன. இவைகளை நாயனார் இங்குக் கூறியதற்குக் காரணம், `முத்தி வகையாகிய பராவத்தையை அடைந்தோர் படிமுறையானே கீழ் இருந்து மேல் உள்ள இந்நிலைகளை யெல்லாம் அடைவர்` என்பதும், `அந்நிலையில் அவர்களும் இங்குக் கூறிய பெயர்களையெல்லாம் பெறுவர்` என்பது உணர்த்தற் பொருட்டாம். சிவனது நிலைகள் `சம்பு பட்சம்` என்றும், பராவத்தையை எய்தினோரது நிலைகள் `அணுபட்சம்` என்றும் சொல்லப்படும்.
மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் கூறியபடி கீழ் உள்ளவை நான்கும் உருவம். மேல் உள்ளவை நான்கும் அருவம். இடையில் உள்ள ஒன்றும் அருவுருவம். அருவம் இலயம், அரு வுருவம் போகம். உருவம் அதிகாரம். இந்த மூன்றும் இறை யவத்தைகளாகும். மேல் எல்லாம் கூறியன உயிர் அவத்தைகள். அருவம், `நிட்களம்` என்றும், உருவம், `சகளம்` என்றும், அருவுருவம் `நிட்களசகளம்` அல்லது `சகள நிட்களம்` என்றும் சொல்லப்படும். இறையவத்தை மூன்று பற்றிய முத்திகளே, `அதிகார முத்தி, போக முத்தி, இலயமுத்தி` எனக் கூறப்படுகின்றன. இம்மூன்றும் `அபரமூத்தி` என்றும் சொல்லப்படும். இவையெல்லாம் இம்மந்திரத்தின் வழிப் பெறப்படும். இதனானே இது, மேல், `சிவமாம் பரத்தினில் சத்தி`* என்றதற்குப்பின் `கூறியது கூறல்` ஆகாமை உணர்க.
இதனால், `பராவத்தை சாக்கிரம் முதலியவற்றால் ஐந்தாதலே யன்றிப் பிறவாற்றால் பலவாதலும் உண்டு` என்பது கூறப்பட்டது.